• Breaking News

    நவராத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் சொல்லும் கதைகள்!

    நவராத்திரி கொண்டாட்டம் கலை கட்டத்துவங்கியுள்ளது. இறைவனின் அருள் பெற பலரும் வித விதமாக கொலு வைத்து வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சோழர் மன்னர்கள் காலத்தில் நவராத்திரி அரச விழாவாக கொண்டாடப்பட்டிருக்கிறது. கொலு வைத்து கொண்டாடப்படும் இந்த ஒன்பது நாட்களிலும் நவராத்திரி குறித்த புராணக்கதைகள் கேட்பார்கள். இங்கே நவராத்திரி அன்று சொல்லப்படும் கதைகள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.

    ஒரு முறை தேவர்களுக்கு நிறைய துன்பங்களை கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்வதற்காக சக்தி வாய்ந்த சக்தியை உருவாக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்டினர். இதனால் சிவன், விஷ்னு மற்றும் பிரம்மா ஆகியோர் சக்தி வாய்ந்த தேவியை உருவாக்க முடிவு செய்தனர்.

    ஆக்ரோஷ தேவி :
    மூவரின் அருளில் பத்து கைகள் மற்றும் ஆக்ரோசமான முகத்துடன் பெண் தெய்வம் தோன்றியது. அந்த தெய்வம் தான் துர்க்கை. பார்வதி தேவியின் ஒரு வடிவம் என்றும் சொல்லப்படுகிறது. பிற தெய்வங்கள் தங்களின் ஆயுதங்கள் ஒவ்வொன்றாக துர்க்கைக்கு வழங்கினர். இறுதியாக துர்க்கை மகிஷாசுரனை அழித்து வெற்றிக் கொண்டாள்.



    கொலு :
    நவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். இந்த கொலுவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, துர்க்கையிடம் தங்களின் ஆயுதங்களை சக்திகளை எல்லாம் கொடுத்துவிட்டு பொம்மைப் போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது. இதே போல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சக்தியின் வடிவம் தான் என்பதை வலியுறுத்தம் விதமாகவும் கொலு வைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.


    ராமர் இருந்த விரதம் :
    சீதையை ராவணன் தூக்கிச் சென்ற போது ராமரை சந்தித்து, இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே இந்த அவதாரத்தின் நோக்கம், அதனை அடைய பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்று சொல்கிறார். நாரதரின் வழிகாட்டுதலின் படி மிகவும் சிரத்தையுடன் விரதத்தை அனுஷ்டித்தார் ராமர். அஷ்டமி அன்று இரவில் அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சிதந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை நினைவுபடுத்தி, ' தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் இளவல் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்றுரைத்தார்.


    நவரத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் :
    இந்த விரதத்தை திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யும் பொருட்டு சிவனும், விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.


    நவாராத்திரி கோலம் :
    நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. கண்டிப்பாக அரிசி மாவைத்தான் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் குடும்ப ஒற்றுமையையும் செல்வமும் பெருகும். சுண்ணாம்பு பயன்படுத்தினால் எதிர்மறையான விளைவுகளே உண்டாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்தும் போடலாம்.




    பிற நவராத்திரிகள் :
    புரட்டாசியில் வருகின்ற நவராத்திரியைத் தவிர பங்குனி மாதம் அமாவாசைக்குப்பிறகு பிரதமையில் துவங்கும் லலிதா நவராத்திரி,மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகாவராகொ நவராத்திரி கொண்டாடப்படுகிறது.


    வழிபாட்டு முறை :
    நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானிக்க வேண்டும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரிக்க வேண்டும். நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் கூறுவது கூடுதல் பலன்களைத் தரும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.




    விஜய தசமி :
    நவராத்திரியின் ஒன்பதாம் நாள் விஜயதசமி எனப்படுகிறது. இந்த நாள் வெற்றித் திருநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய அரக்கர்களை பராசக்தி அழித்த நாள். ராவணனை ராமர் வென்ற நாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்களின் ஆயுதங்களையும் துர்க்கையையும் வழிபட்ட நாள். விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே 'விஜயதசமி' என்றும் கூறப்படுகிறது.


    ஒன்பது நாட்கள் ஒன்பது தேவிகள் :
    இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். முதல் மூன்று நாட்கள் மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம்.

    Post Bottom Ad